சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்து விடும். வாகனப் போக்குவரத்து அதிகரித்து, உணவு தேடிச் செல்லும் விலங்குகள் உயிருக்கு ஆபத்தாகிவிடும். புதிய சாலையால் நீர் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதிதாக அமைக்க உள்ள சாலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும் என்று வனத்துறை அதிகாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க அரசுத்தரப்பில் அவகாசம் கேட்ட போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்துவதாக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணி உடனே நிறுத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் appeared first on Dinakaran.