ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் கும்கி ராமு உயிரிழப்பு

3 months ago 11

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் உடல் நிலை பாதிக்கப்பட்ட கும்கி யானை ராமு இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வன சரகத்தில் உள்ள கோழிகமுத்தி முகாமில் ராமு என்கிற கும்கி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை அடக்குவது, மதம் பிடித்த யானைகளை விரட்டுவது உள்ளிட்ட பணிகளில் திறம்பட செயல்பட்டது.

55 வயது மதிக்கத்தக்க கும்கி யானைக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கும்கி யானை ராமுவை வரகளியார் முகாமில் வைத்து உரிய சிகிச்சை அளித்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இருந்தபோதிலும், நாளுக்கு நாள் கும்கி யானை ராமுவின் உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கும்கி யானை ராமு இறந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த 30 ஆண்டுகளாக டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்பட்டு, அனைத்து யானைகளுக்கும் தலைமை யானையாக செயல்பட்டு வந்த கும்கி யானை ராமு உயிரிழந்தது வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் கும்கி ராமு உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article