
சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.
1. நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரிகள். இது போல் மாதம் இரண்டு முறை வரும் நித்திய சிவராத்திரி விரதத்தை தொடர்ந்து 24 முறையும் அனுசரிப்பதே நித்திய சிவராத்திரி விரதம்.
2. பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.
3. மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி யில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
4. யோக சிவராத்திரி: சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
5. மகா சிவராத்திரி: பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பவுர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை. அதே சுக்லபட்சமானால் மறுநாள் பவுர்ணமி. தொடக்கம், முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது.
சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருடம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
ஐந்து வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருடம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருப்பது பலனை தரும். மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், சுந்தரபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.