திருவொற்றியூர்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார். வெளி மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா, போதை பவுடர், புகையிலை, கடத்தி வருவதை தடுக்கும் விதமாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தீவிர சோதனை நடத்தி, போதைப் பொருள் கடத்தி வருபவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி, நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒன்றாவது நடைமேடைக்கு வந்த சாலிமர் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி வந்தபோது ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்களில் சந்தேகப்படும்படியாக இருந்தவரிடம் விசாரணை நடத்தினார். அதில், ஒரு வாலிபர் வைத்திருந்த பேக்கில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கோயம்புத்தூர் மாவட்டம், மாதம்பட்டி மகாலட்சுமி கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பதும், இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்திக்கொண்டு கோயம்புத்தூருக்குச் செல்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்திய கோவை வாலிபர் கைது: 10 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.