
அமராவதி,
கர்நாடகாவைச் சேர்ந்த திப்பாரெட்டி சுனில், சிவண்ணா, லோகேஷ், கங்குலையா ஆகிய நான்குபேரும் ஆந்திராவில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் செய்யச் சென்று கொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் பிலேரு - சதும் சாலையில் குரவப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் கார் அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. இதனையடுத்து விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் சிவண்ணா, லோகேஷ், கங்குலையா ஆகிய 3 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுனிலுக்கு மட்டும் நீச்சல் தெரிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட மீட்பு குழுவினர் பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.