![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38306768-6-alex-carey-afp.webp)
காலே,
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் சுமித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா நேற்றைய 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்திருந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நேற்றைய முடிவில் 73 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அலெக்ஸ் கேரி, ஸ்மித் நிலைத்து ஆடினர். இதில் ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய 3ம் நாள் முடிவில் 62.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை தற்போது வரை 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 48 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா தரப்பில் குனமென் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆடம் கில்கிறிஸ்டின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆசியாவில் ஆடம் கில்கிறிஸ்ட் 144 ரன்கள் எடுத்ததே சாதனயாக இருந்தது. இந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி (156 ரன்) முறியடித்துள்ளார்.