அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

6 hours ago 1

திருப்பூர்,

அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி ஆடியோ அனுப்பி இருந்தார். அதில் தனது சாவுக்கு தனது கணவன், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் மனு கேட்டு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ரிதன்யாவின் தந்தை தரப்பு வக்கீல்கள், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

தொடர்ந்து சித்ராதேவி, ஜாமீன் கேட்டு முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை தரப்பு வக்கீல் மூலமாக ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுவை திருப்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், தற்போது அவரது மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article