மேல்மலையனூர், பிப். 15: விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பல்வேறு விவசாய பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தற்போது உளுந்து அறுவடை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் உளுந்து பயிர்களை விற்பனைக்காக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். அங்கு எடை போடும் ஊழியர்கள் 100 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு கூடுதலாக எடை வைத்து விவசாயிகளிடமிருந்து அதிகளவு உளுந்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து விவசாயிகள் நேற்று திடீரென திருவண்ணாமலை-சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த அவலூர்பேட்டைபோலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எடை அதிகமாக போடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் மறிலை கைவிட்டு கலைந்து சென்றனர்.எனினும் விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் திருவண்ணாமலை-சேத்துப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அவலூர்பேட்டையில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
The post அவலூர்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.