![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39135113-annamalai.webp)
சென்னை,
திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி. கவர்னரும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம்.
உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க. பா.ஜனதா தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் இங்கு இருந்து செல்லும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்" என்றார்.