
சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த சிலர் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள நீம்ஹெரா கிராமத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் சென்றனர். பின்னர் இன்று அதிகாலையில் குருகிராமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஒன்றில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் சென்ற 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் லாரியின் பின்னால் சிக்கிய காரை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை சிதைந்த வாகனத்திலிருந்து போலீசார் மீட்டனர்.
இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்தவர்கள் குருகிராமைச் சேர்ந்த கவுரவ், சச்சின், கன்வர் பால் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.