
சென்னை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ), பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.
இதன் எதிரொலியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்வேறு இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபட கூடாது என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததன் தொடர்ச்சியாக அந்த் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.