சென்னை: மலர் கண்காட்சி தொடக்கம், பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐந்து நாள் அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி செல்கிறார். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை கால விழா என்பது நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில் ஆடவர், மகளிர் என தனித்தனியாகவும், இருபாலரும் இணைந்து பங்கு பெறும் படகுப்போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. அதேபோல், பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டால்பின்கள், மீன், சிப்பி, நத்தை, ஆமை, பென்குயின் உட்பட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வடிவமைக்கப்பட்டு 20வது ரோஜா கண்காட்சியும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தநிலையில், கோடை காலத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி வரும் 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஐந்து நாள் அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி செல்கிறார். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கோவை செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி விரைகிறார். இதன் பின்னர், அரசு தரப்பில் நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இதுமட்டுமின்றி, தொட்ட பெட்டாவில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள மலர் கண்காட்சியை முதல்வர் வரும் 15ம் தேதி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு 16ம் தேதி அல்லது 17ம் தேதி மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
The post அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி பயணம்: 15ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கி வைக்கிறார் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் appeared first on Dinakaran.