சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியதாவது: உலக அளவில் மிகப்பெரிய நாடுகளுக்கு சவால் விடும் வகையில், தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கை 56 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்நோயாளிகளின் எண்ணிக்கை 43 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த மக்கள் அரசு மருத்துவமனையை நம்ப தொடங்கியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு 1000 பிறப்புகளுக்கு 10.4 என்ற அளவில் இறப்பு விகிதம் இருந்தது. தற்போது 7.8 விகிதமாக குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 96.6 என்ற விகிதத்திலிருந்து தற்போது 39 விகிதமாக குறைந்துள்ளது.
2022ம் ஆண்டு தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஜப்பானை போல 38 மாவட்டங்களில் ஹெல்த்வாக் திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் எழும்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் காரப்பேட்டை பகுதியில் ரூ.250.46 கோடியில் அண்ணா கேன்சர் ரிசர்ச் இன்ஸ்டியூட் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது. ஆங்கிலத்திலிருந்து 23 மருத்துவ நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 மருத்துவ நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post அரசு மருத்துவமனையை மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர் புறநோயாளிகள் எண்ணிக்கை 56 சதவீதம் உயர்வு: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.