மதுரை: அரசு மருத்துவமனைகளில் ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களை பின்பற்றி ‘டயாலிசிஸ்’ சிகிச்சையை ‘அவுட் ஸ்சோர்சிங்’ முறையில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 100-க்கும் மேற்பட்ட அரசு தாலுகா மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் நோயாளிகளுடைய உயிர் காக்கும் வகையில் இச்சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழக அரசு மருத்துமனைகளில் 1500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் எந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஒரு எந்திரத்துக்கு ரூ.6 லட்சம் வீதம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் அரசு செலவு செய்துள்ளது. இதற்காக சிகிச்சை அளிக்கப்படும் வார்டுகளில் படுக்கைகள், ஏசி வசதிகள், சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ தண்ணீர் வசதி, மின்சாரம், சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், டெக்னீஷன்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் என்று மிக பிரமாண்ட மருத்துவ கட்டமைப்பு வசதியை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.