அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி

16 hours ago 6

ஊட்டி : உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் ஆகியவை இணைந்து ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரிங்கிராஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் ரத்த கொடையாளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சேரிங்கிராஸ் துவங்கி கமர்சியல் சாலை வழியாக சேட் மகப்பேறு மருத்துவமனை வரை பேரணி நடந்தது. ரத்த வங்கி பணியாளர்கள், மருத்துவ கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகையுடன் பேரணி சென்றனர்.

இதுகுறித்து ஊட்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், ‘‘விபத்து, அறுவை சிகிச்சை போன்ற அவசர கால சூழ்நிலையில் சிகிச்சை பெறுபவருக்கு ரத்தம் இன்றியமையாததாக உள்ளது.

அந்த வகையில், குருதி கொடை என்பது உயிர்காக்கும் சேவையாக கருதப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள அனைவரும் தானாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். 18 முதல் 65 வயது வரையுள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களும் ரத்த தானம் செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்’’ என்றார்.

இதில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஜெயலலிதா, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், நோயியல் துறைத் தலைவர் கலைவாணி, ரத்த வங்கி டாக்டர்கள் புவனேஸ்வரி, ராகவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article