சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
அரசு பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், எத்தனை காலியிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்களும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணையில் அதுபோன்று காலியிடங்கள் பற்றிய விவரம் இடம்பெறவில்லை.