
சென்னை,
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி அவை விதி 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக, பண்டிகை கால முன்பண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில், இதுவரை வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரம், இனி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உள்ளாட்சி அமைப்புகளின் கல்வி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பண்டிகை கால முன்பணம் பெறும் தகுதியுடைய அனைவருக்கும், இந்த அரசாணை பொருந்தும். அதன்படி அவர்கள் ரூ.20 ஆயிரத்தை பண்டிகை கால முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பணத்தை பிடித்தம் செய்யும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.