
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு என்ற இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரெயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், தண்டவாள இணைப்பு போல்டுகள் கழற்றப்பட்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தன. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இவ்வாறு செய்யப்பட்டிருந்தது. இந்த சதிச்செயலை உரிய நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து கற்கள், போல்டுகளை அகற்றினார். இதனால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக புதுச்சேரி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அரக்கோணத்தில் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியாரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். ரெயில் தண்டவாளத்தின்மீது கற்களை வைத்த உத்தரகாண்டை சேர்ந்த ஹோம் என்ற சாமியாரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இன்று கைது செய்தனர். அந்த நபரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.