வேடசந்தூர், பிப். 19: அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு மேற்கு களத்தில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்ல குடியிருப்புவாசிகள் ஆரம்ப காலத்தில் அமைந்துள்ள வண்டிப்பாதையை பயன்படுத்தியும், அருகில் அமைந்துள்ள ஓடை புறம்போக்கு வழியாகவும் பயணித்து வந்தனர். அதன்பிறகு வண்டிப்பாதை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கொண்டதால் நீண்ட காலமாக சாலை வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர் அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செயல் அலுவலர் அன்னலட்சுமி, தலைவர் கருப்பன், துணை தலைவர் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், ‘போர்க்கால அடிப்படையில் வண்டிப்பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர். மனுவை பெற்ற செயல் அலுவலர், தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவதாக தெரிவித்தார்.
The post அய்யலூர் 5வது வார்டில் வண்டி பாதையை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.