
டப்ளின்,
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்துக்கு அவர் சென்றார்.
இந்நிலையில், அயர்லாந்து நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி ஜெய்சங்கர் டப்ளின் நகரில், அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை அவரிடம் தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அதில், அவருடைய கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என தெரிவித்து உள்ளார். மத்திய மந்திரியின் அயர்லாந்து பயணம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.
இதற்கு முன்பு, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி ஜெய்சங்கர், அந்நாட்டு உள்துறை மந்திரி வெட் கூப்பரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், ஆள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி இருவரும் பேசினர்.
இதேபோன்று தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான மந்திரி ஜோனாதன் ரெனால்ட்ஸ் உடனும் ஜெய்சங்கரின் சந்திப்பு நடந்தது. இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லேமியை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.
அதற்கு முன் பிரதமர் கீர் ஸ்டார்மரையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் சிறந்த வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு, பொருளாதார ஒப்பந்தம் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னெடுத்து செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி ஸ்டார்மர், ஜெய்சங்கரிடம் பகிர்ந்து கொண்டார்.