
புதுடெல்லி,
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதான லஞ்ச வழக்கில், பாதிக்கப்பட்டவர்களான பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன், ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் சார்பில் வக்கீல் பிரணவ சச்தேவ் ஆகியோரும் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலைஅறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் சிறப்பு கோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டில் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தியது.
அப்போது, சீலிட்ட உறையில் அளித்த அறிக்கையை நீதிபதிகள் பிரித்து படித்து பார்த்தனர். சீலிட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ள நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.