ராணிப்பூர்: உத்தரகாண்டில் தன்னை அமித் ஷாவின் மகன் எனக்கூறி கொண்டு 3 பாஜக எம்எல்ஏக்களிடம் பணம் பறிக்க முயன்ற நபர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலம் ராணிப்பூர் பாஜக எம்எல்ஏ ஆதேஷ் சவுகானை, கடந்த 14ம் தேதி ஒருவர் சந்தித்தார். அவர் தன்னை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்று கூறிக் கொண்டு எம்.எல்.ஏவிடம் பணம் கேட்டு மிரட்டினார். அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ, அந்த நபரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். அதன்பின் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இருந்தாலும் தனது உதவியாளர் மூலமாக பஹத்ராபாத் காவல் நிலையத்தில் எம்எல்ஏ புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக பி.என்.எஸ். பிரிவு 102/25 மற்றும் 308 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடினர்.
இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி பிரமேந்திர சிங் தோபால் கூறுகையில், ‘எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டிய குற்றவாளியை டெல்லி, காசியாபாத்பகுதியில் தேடினோம். கடைசியாக டெல்லியில் பதுங்கியிருந்த குற்றவாளியை பிடித்தோம். அவரது பெயர் பிரியான்ஷு பந்த் என்பதும், அவர் பாகேஷ்வரில் வசிப்பதும் தெரியவந்தது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டி, தனது இரண்டு கூட்டாளிகளான உபேஷ் அகமது, கவுரவ்நாத் ஆகியோருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். ராணிப்பூர் எம்எல்ஏ மட்டுமின்றி ருத்ராப்பூர் எம்எல்ஏ ஷிவ் அரோரா மற்றும் நைனிடால் எம்எல்ஏ சரிதா ஆர்யா ஆகியோரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் மீது நைனிடால் மற்றும் ருத்ராப்பூரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைதான பிரியான்ஷு பந்த், 2024ம் ஆண்டில் தன்னை பிரதமர் அலுவலக செயலாளர் எனக் கூறிக் கொண்டு, எம்.எல்.ஏ ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த சம்பவத்தில் அவர் நாசிக்கில் கைது செய்யப்பட்டார். உபேஷ் அகமதுவையும் ருத்ராப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கவுரவ்நாத் தலைமறைவாக உள்ளார். அவரை விரைவில் கைது செய்வோம்’ என்று கூறினார்.
The post அமித் ஷாவின் மகன் எனக்கூறி கொண்டு 3 பாஜக எம்எல்ஏக்களிடம் பணம் பறிக்க முயற்சி: உத்தரகாண்டில் 3 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.