'அமரன்' போரைப் பதிவு செய்யும் படம் அல்ல ! - சிவகார்த்திகேயன்

2 hours ago 2

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 18-ந் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலைவாணர் அரங்கில் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை பற்றி பேசினார். அதாவது, "அமரன் படம் போரைப் பதிவு செய்யும் படம் அல்ல, ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பதிவு செய்யும் படம்" என்று விழாவில் பேசினார்.

Read Entire Article