சென்னை / திருவாரூர்: ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற சில மாவட்டங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், காஷ்மீர் முஸ்லிம்களை அவதூறு செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சில முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டின.