
புதுடெல்லி,
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை ராணுவம் தந்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியால்தான் இந்த தாக்குதல் சாத்தியமானது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை. தாக்குதல் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியுள்ளோம்.
பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் திட்டமிட்டு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூரின் இலக்கு முழுமையாக எட்டப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய வீரர்கள் மகத்தான தைரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய முப்படைகளால் நாட்டிற்கு பெருமை. துல்லியத்தாக்குதல் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.