
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதேவேளை, கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார்.
இதனிடையே, தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை நேற்று முன் தினம் காலை (5ம் தேதி) திடீரென அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் சமாதானம் ஏற்படுத்த கட்சியினரும், குடும்பத்தினரும் முயற்சித்தனர். அன்றைய தினமே மாலை அ.தி.மு.க.வை சேர்ந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்தார். அடுத்தடுத்த இந்த சந்திப்பு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தைலாபுரத்தில் இருந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னைக்கு செல்கிறேன். சொந்தங்களை பார்க்கவும், குழந்தைகள், கொள்ளுப்பேரன்களை பார்க்க செல்கிறேன். சென்னையில் இருந்து திங்கட்கிழமை மீண்டும் தைலாபுரத்திற்கு வருகிறேன்.
ஆடிட்டர் குருமூர்த்தி வந்தார் பேசினார். ஆடிட்டர் குருமூர்த்தியை நான் மிகவும் மதிக்கிறேன். எங்கள் நட்பு நீண்ட நாள் நட்பு. சைதை துரைசாமியும் எனக்கு 30 ஆண்டுகள் பழக்கம். இருவரும் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர்.
அன்புமணி வந்தார்... பேசினார்... இது குறித்து சென்னை சென்று வந்த பின் விரிவாக கூறுகிறேன்' என்றார்.