
மும்பை
துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜல்காவ் சென்றார். அவர் மதியம் 3.45 மணிக்கு ஜல்காவ் விமான நிலையம் செல்ல இருந்தார். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக விமானம் மாலை 6.15 மணிக்கு தான் ஜல்காவ் சென்றடைந்தது. எனவே ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் முக்தாய்நகரில் நடந்த துறவி முக்தாய் பால்கி யாத்திரையில் கலந்து கொண்டு மீண்டும் விமான நிலையம் திரும்ப இரவு 9.15 மணி ஆகியது.
இந்தநிலையில் தனது பணி நேரம் முடிந்துவிட்டதால் ஏக்நாத் ஷிண்டே மும்பை வர இருந்த விமானத்தை இயக்க முடியாது என விமானி கூறினார். திடீரென விமானி விமானத்தை இயக்க மறுத்ததால் அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். இந்தநிலையில் மந்திரிகள் கிரிஷ் மகாஜன், குலாப்ராவ் பாட்டீல் விமானியிடம் தனிஅறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு விமானி விமானத்தை இயக்க ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் காரணமாக நேற்று இரவு ஜல்காவ் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.