
சென்னை அபிராமபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு கருணாநிதி ஒரு உதாரணம்; சக்கர நாற்காலியில் இருந்தே முதல்-அமைச்சரானவர் கருணாநிதி. அவர் 94 வயது வரை அரசியல் செய்தார். அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் விரைவில் வரும். அது சென்னையில் இருந்து வருமா, தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருமா என்று எனக்கு தெரியாது.
நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். அமித்ஷாவை இதுவரை நான் சந்தித்தது இல்லை. கூட்டணி குறித்து இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தெரிந்து விடும். யாருடன் கூட்டணி? எப்போது? ஏன்? என்பதற்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது. கூட்டணி தேசிய கட்சியோடும் இருக்கலாம். மாநில கட்சியோடும் இருக்கலாம்.
புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு அப்போது வாழ்த்து சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன். அன்புமணியுடன் பேசியது ரகசியம்; ரகசியத்தை சொல்லக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.