சென்னை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய பாரம்பரிய பாடகர் பயாஸ் வாசிப்புதீன் தாகர் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் ‘வீர ராஜா வீரா’ பாடல் என்பது தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய ‘சிவா ஸ்துதி’ என்ற பாடல் ஆகும். அதனை எங்களின் அனுமதி இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் பயன்படுத்தி உள்ளார். எனவே அதற்கு இழப்பீட்டு தொகை வழங்கும் விதமாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விரிவாக விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிங் வழங்கிய தீர்ப்பில், ‘‘பொன்னியின் செல்வன் படத்தின் ‘வீரா ராஜா வீரா’ பாடல் என்பது மனுதாரர் கூறியது போல் ‘சிவா ஸ்துதி’ பாடலை போன்றே உள்ளது. அதனை நீதிமன்றம் தெளிவாக ஆய்வு செய்தது. குறிப்பாக ‘சிவா ஸ்துதி’ பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால், ‘வீர ராஜ வீரா’ பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்திலேயே விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.