அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்: தி.மு.க. ஆட்சியில் குறையும் முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி சாடல்

5 hours ago 3

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விளம்பர வெற்றிகளில் மட்டுமே மிதக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ்நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.

இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை (FDI) மராட்டியமும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழ்நாடு வெறும் $.3.68 பில்லியனுடன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

மராட்டியம் ($.19.6 பில்லியன்), கர்நாடகா ($.6.62 பில்லியன்), டெல்லி ($.6 பில்லியன்), குஜராத் ($.5.71 பில்லியன்) என்று முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி உள்ளன. நிதி மேலாண்மை நிபுணர்கள், மராட்டியமும், கர்நாடகாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு நட்புக் கொள்கைகள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்தியதன் விளைவாக FDI-ஐ கவர்ந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு தேக்கம், துறைகள் தோறும் பெருகிப்போன ஊழல், பல நிலைகளில் பேரம் பேசுவது, முதலீட்டாளர்களை ஈர்த்து தக்க வைப்பதற்கான கொள்கைகளை வகுக்காதது மற்றும் புதிய யுக்திகளை மேற்கொள்ளாதது போன்றவை முதலீட்டாளர்களை மற்றும் முதலீடு ஈர்ப்பைத் தடுக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

2024-25-ல் மொத்த FDI $.81.04 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.5 சதவீதம் மட்டுமே. பதிவுகள் மற்றும் இணைய தரவுகளின்படி, முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் "உலக முதலீட்டாளர் மாநாடு" போன்றவை வெற்று விளம்பரங்களாகவே மாறியுள்ளன.

'ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று முதல்-அமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான். 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? மிகச் சொற்பமே! உண்மையில் கர்நாடகாவின் IT மையங்களும், மராட்டியத்தின் தொழில் மயமாக்கலும் முதலீட்டாளர்களைக் கவர்கின்றன. அந்த அரசுகளும் அதற்கு முயற்சிகள் செய்கின்றன.

தமிழ்நாடு முதலீட்டு ஓட்டத்தில் மீண்டெழ உள்கட்டமைப்பு மேம்பாடு, தூய்மையான நிர்வாக முறைகள் எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிப்படையான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரங்களில் மட்டும் "நம்பர் ஒன்" என முழங்குவது முதலீடுகளை ஈர்க்காது என்பதை தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு புரிந்துகொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் அவர்களே, உண்மையான முன்னேற்றத்திற்கு உறுதியான செயல்கள் தேவை! வாய்ச்சவடால் மட்டும் போதாது.

மத்தியப் பிரதேச அரசு, தங்களுடைய மாநிலத்தில் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும் என்றும், அம்மாநில முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு நேரில் வந்து அங்குள்ள தொழிலதிபர்களுக்கு, அவர்களது மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்ததுடன், அம்மாவட்டங்களில் தனியாக அலுவலகம் ஒன்றையும், இந்த விடியா ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் திறந்துள்ளனர்.

மேலும், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசில் (2016-21)ல், 2 லட்சம் கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொடர்பான தொழில் நிறுவனங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பலனளிக்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க.வின் அலட்சியம் காரணமாக இத்தொழிற்சாலைகள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கும் சென்றுவிட்டன.

இவ்வாறு பிற மாநிலங்கள் சர்வதேச முதலீடுகளையும், தொழில் வளர்ச்சியையும் திறம்பட பயன்படுத்தி முன்னேறும்போது, தமிழகம் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மெத்தனமான மற்றும் அலட்சியமான ஆட்சியால் பின்தங்கி, பொருளாதார வாய்ப்புகளை இழந்து வருகிறது.

மத்திய அரசு, கடலோர மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசு சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆந்திரா, குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, அவர்களது கடலோர மாவட்டங்களின் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கும், தொழில் வளர்ச்சிக்கும் பல திட்டங்கள் தீட்டியுள்ளன. ஆனால், தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு தனது அலட்சியத்தால் தமிழக கடலோர மாவட்டங்களின் துறைமுகங்களை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சி, ஒரு சுய தம்பட்ட அரசு என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்தியாவிலேயே உற்பத்தி மதிப்பில் 9.69 சதவீதம் அடைந்து முதலிடம் பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்து, கோட்டு சூட்டுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும் அதிக அளவில் அரசுப் பணத்தை வீணடித்து முதல் பக்கத்தில் விளம்பரப்படுத்திக்கொண்ட ஒரே முதல்-அமைச்சர் தி.மு.க.வின் முதல்-அமைச்சர் ஸ்டாலினாகத்தான் இருக்கும்.

மெட்ரோ Phase II சுமார் ரூ. 62 ஆயிரம் கோடி; சென்னை (Peripheral Road) எல்லைச் சாலை திட்டம் சுமார் ரூ. 12,300 கோடி; சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமார் ரூ. 5,000 கோடிக்கு மேலாக வெள்ளத் தடுப்பு பணிகள்; பல பாசனத் திட்டங்கள் என்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களைத் தயாரித்து, மத்திய அரசின் அனுமதி பெற்று, எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு இருக்கின்றபோது பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது.

2021-க்குப் பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சி இத்திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறதே தவிர, எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. இந்தத் திட்டங்களால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தற்போது உள்ள நிலையிலாவது உள்ளது. இதில் தி.மு.க.வின் சாதனை எதுவும் இல்லை.

இத்தனைக்கும், இந்தப் புள்ளி விவரம் முதற்கட்ட புள்ளி விவரம்தான். பல மாநிலங்கள் இன்னும் புள்ளி விவரங்களைத் தரவில்லை. அதுமட்டுமல்ல, இந்தப் புள்ளி விவரத்திலேயே விவசாயத் துறையின் வளர்ச்சி, எதிர்மறையாக, அதாவது 0.09 சதவீதமாகத்தான் உள்ளது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி 7.96 சதவீதம்தான். இதுபோல், தமிழ்நாடு 2015-16, 2017-18ல் கூட அதிக வளர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம். ஏன், கொரோனா காலத்தில்கூட இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோதும், தமிழ்நாட்டின் வளர்ச்சி நேர்மறையாக இருந்தது. அப்போதெல்லாம் யாரும் தமிழக பத்திரிகைகளில் முதல் பக்க முழு விளம்பரம் கொடுத்துக் கொள்ளவில்லை.

தி.மு.க. அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் சாதனை. இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, முதல்-அமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.

இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ஸ்டாலின் தி.மு.க.விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article