அதிமுக நிர்வாகி கொன்று எரிப்பு

4 months ago 13

கடலூர், ஜன. 17: கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே எம்.வீரட்டிக்குப்பம் முதனை சாலையில், நேற்று காலை சென்றவர்கள், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சென்று சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அங்கு சென்று விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில், எரிந்து கிடந்தவர் வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கதிர்காமன் (43) என்பதும், அக்கிராம அதிமுக கிளை பொருளாளர் என்றும் தெரிந்தது.

நேற்று முன்தினம் மாலை கதிர்காமன், அவரது நண்பர்கள் முன்னாள் ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அங்குள்ள முந்திரி தோப்பில் மது அருந்தியுள்ளனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், கதிர்காமனுக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்ட நிலையில் மற்றொரு நண்பரான பிரபாகரன் அங்கிருந்து வெளியேறினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலகிருஷ்ணன், கதிர்காமனை பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர், முந்திரி தோப்பில் கிடந்த சுள்ளிகளை பொறுக்கி, கதிர்காமனின் உடல் மீது போட்டு தீயிட்டு எரித்துவிட்டு பாலகிருஷ்ணன் தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். கதிர்காமனுக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், சந்தியா, சந்தோஷ் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

The post அதிமுக நிர்வாகி கொன்று எரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article