அதிமுக தொகுதிகளை பறிக்க வேண்டும் 50 தொகுதிகளில் இம்முறை போட்டி மதுரை சிந்தாமணி ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மாநில பாஜ மையக்குழு கூட்டம் அமித்ஷா தலைமையில் நேற்று பிற்பகலில் நடந்தது.
பொதுவாக இந்த மையக்குழு கூட்டம் நாள் முழுவதும் நடைபெறும் நிலையில், அமித்ஷா வருகையை கணக்கிட்டு மிகக்குறுகிய நேரமாக சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக மேலிட பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், கே.பி.ராமலிங்கம், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, பொன்.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அதிமுக டெபாசிட் இழந்த ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் அதிகளவில் பாஜ போட்டியிட முனைப்பு காட்டவும், கூடுதல் தொகுதிகளை பெற திட்டமிட்டு தேர்தல் பணியாற்றவும் வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ இரண்டாம் இடம் பிடித்த தொகுதிகளில் கூடுதல் வேலை பார்க்க வேண்டும். இம்முறை குறைந்தது 50 இடங்களில் பாஜ போட்டியிட திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சியினரை யாரும் விமர்சிக்க வேண்டாம். கூட்டணி அமைத்த பிறகும் அதிமுகவுடன் இணைந்து போராட்டம் ஏன் நடத்தவில்லை? பல கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து வருகிறது. இதைப்பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். அண்ணாமலைக்கு தேர்தல் பொறுப்பு உள்ளிட்ட தேசிய அளவிலான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். புதிய மாநிலத்தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு தருவது அவசியம்’’ என்றார்.
The post அதிமுக தொகுதிகளை பறிக்க வேண்டும் 50 தொகுதிகளில் இம்முறை போட்டி ; நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவு appeared first on Dinakaran.