சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி தினகரன் கடந்த 2017ம் ஆண்டு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுகவின் கொடியைப் போன்று கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களை கொடியின் நடுவே ஜெயலலிதா புகைப்படம் பயன்படுத்திய கொடியை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தனர். மனுவில், அமமுக கட்சியில் ஜெயலலிதா பெயர் அவரின் புகைப்படம், அம்மா என்ற பெயர் அதிமுகவின் கட்சி கொடியில் உள்ளது போல் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடி பயன்படுத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் பயன்படுத்தியதற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நேற்று சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் கவுதம்குமார், டிடிவி தினகரன் தரப்பில் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜாரனர். அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த வழக்கை திரும்ப (வாபஸ்) பெறுவதாகவும், இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு அமமுக டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை திரும்ப (வாபஸ்) அனுமதித்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதிமுக தற்பொழுது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
The post அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம் விவகாரம்: டிடிவிக்கு எதிரான வழக்கு எடப்பாடி திடீர் வாபஸ் appeared first on Dinakaran.