அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டது ; தென்காசியில் ரூ.119 கோடியில் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம்

3 months ago 8

தென்காசி,பிப்.10: தென்காசியில் ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் அதிநவீன முறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தென்காசி கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படுமா? என அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டம் உதயமாக வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேறியது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்த 10 தொகுதிகளில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளை பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2020ம் ஆண்டு புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக 119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தென்காசி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து 13 ஏக்கர் நிலப்பரப்பு பிரித்து எடுக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி துவங்கியது தற்போது 90% பணிகள் நிறைவடைந்துள்ளன. கட்டுமானப்பணிகளை பொறுத்தவரை கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்து விட்டது. உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி பெயிண்டிங் பணிகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதை காரணமாக காட்டி இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் அனுமதி: தென்காசி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை முன்னதாகவே பெறவேண்டிய நிலை உள்ளது. சுமார் 20 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இச்சட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளது. கிட்டத்தட்ட சுமார் 1 லட்சம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட தென்காசி கலெக்டர் அலுவலகம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாமல் கட்டுமானப்பணி துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது வரை இந்த அனுமதியை பெற முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் எல்காட் நிறுவனம் இதுபோன்று 100 கோடி ரூபாய்க்கு அதிகமான செலவில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது எவ்வாறு பெறப்பட்டது என்ற வழிமுறைகளை அறிந்து அதனை பயன்படுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கும் விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

வளர்ச்சிப்பாதைக்கு நடவடிக்கை: புதிதான உதயமான தென்காசி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய வளர்ச்சிப் பணிகள் எதனையும் மேற்கொள்ள முடியாதவாறு ஹாகா ( HACA) என்று அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் கீழ் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. நாடு முழுவதும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் கீழ் அனுமதி பெற வேண்டிய பகுதிகளில் தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இடம்பெறுகிறது. இதனால் அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட சதுர அடிக்கு மேல் கட்ட முடியாத நிலை உள்ளது.

கிட்டத்தட்ட தென்காசி மாவட்டமே இத்திட்டத்தின் காரணமாக வளர்ச்சிப்பணிகள் நடைபெற முடியாமல் சவலை பிள்ளையாக மாறும் நிலை உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆயுதப்படை மைதானம், குடியிருப்புகள், உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள், அரசு கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்ட எண்ணிலடங்காத பணிகளை துவங்கவே முடியாத நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டது ; தென்காசியில் ரூ.119 கோடியில் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Read Entire Article