இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (12.06.2025) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அண்ணாநகர் மண்டலம், வார்டு-96, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலையில் பழுதடைந்த நிலையில் இருந்த மகப்பேறு மருத்துவமனையினை இடித்துவிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.9.17 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவமனைக் கட்டடமானது, 1275 ச.மீ. பரப்பளவிலான இடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்கள் என தலா 746 ச.மீ., அளவுடன் 2238 ச.மீ. பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 41 படுக்கைகள் கொண்ட படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை பிரிபு, மருந்தகம், ஸ்கேன், இரத்த சேகரிப்பு அறை, எக்ஸ்ரே வசதிகள், 2 மின் தூக்கிகள், 2 படிக்கட்டுக்களுடன் NICU கொண்ட நவீன மகப்பேறு மருத்துவமனையாக அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் . ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், மேயர் திருமதி ஆர். பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெற்றி அழகன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்கள் கூ.பி.ஜெயின், திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி எஸ். தனலட்சுமி, டி.வி.செம்மொழி மற்றும் தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அண்ணாநகர் மண்டலத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.