
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர், கூலி வேலைக்காக வேன் ஒன்றில் அரியானாவிற்கு சென்று கொண்டிருந்தனர். விச்சோலா கிராமத்திற்கு அருகே நேற்று இரவு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது எங்கிருந்தோ இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேன் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனிடையே கண் இமைக்கும் நேரத்தில் சட்டென அந்த அடையாளம் தெரியாத வாகனம் சென்று விட்டது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஷியாம்வதி(60) மற்றும் சமிலா பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பரூக்காபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ராம் குமாரி(35) மற்றும் லவ்குஷ் (30) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த வாகனத்தின் டிரைவரை தேடி வருகின்றனர்.