மும்பை:
அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட வர்த்தக போர் அச்சம், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துவருகின்றன.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன. வர்த்தகத்தின் பெரும்பகுதி குறியீட்டெண் நேர்மறையாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 751.1 புள்ளிகள்வரை உயர்ந்து வர்த்தகமானது. கடைசி நேரத்தில் குறிப்பிட்ட ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் குறியீட்டெண் விறுவிறுவென சரிந்தது.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 32.11 புள்ளிகள் சரிந்து 76,138.97 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 13.85 புள்ளிகள் சரிந்து 23,031.40 புள்ளிகளில் நிலைபெற்றது. இதன்மூலம் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் புளூ-சிப் நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நெஸ்லே, டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
சன் பார்மா, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டின.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று 4,969.30 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.