சென்னை: இட ஒதுக்கீடு 69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என அன்புமணி தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று தி.நகரில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69% இட ஒதுக்கீடு உள்ளது. அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்தான் சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார் தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69% இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டிற்கு பிரச்னை என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
69% இட ஒதுக்கீடு 50 % இட ஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும். தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய சமுதாயங்களின் நிலை குறித்தும் அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இதுதொடர்பாக மாநில மற்றும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் பிராமணர்கள், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டை கொடுக்கலாம் அதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post 69 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறும்: அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.