
தானே,
மராட்டிய மாநிலத்தில் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் உள்ள கன்சோலி பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா காம்ப்ளே (26 வயது). இவரது மகள் வைஷ்ணவி (6 வயது). பிரியங்காவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அவர் மிகுந்த மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவர் வெளியில் சென்றிருந்தபோது, பிரியங்கா தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்து பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.