பெரியகுளம்: தேனி மாவட்டம் தேவதானப் பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கட்சிக்காரருடன் வந்து புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக 14.1.2025-ல் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பாண்டிய ராஜன் மனு அளித்தார்.
அதையேற்று, அன்றைய தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டது. அதை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீஸார் இழுத்துவந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. போலீஸாரால் தாக்கப்பட்டவர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் என்பது தெரிய வந்துள்ளது.