6 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றிய கல்யாண ராணி

1 day ago 1

விருத்தாசலம்: சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முகமது அப்பாஸ் (58). கறிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு வீட்டு வேலைக்காக விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த பெண் சேர்ந்துள்ளார். 3 மாதம் மட்டும் வேலை செய்துள்ளார். அப்போது அப்பாசுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு ரூ.6 லட்சமும், 8 பவுன் நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்களும், வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் கொடுத்துள்ளார். பின்பு இந்த பணத்தையும் நகையையும் திரும்ப கேட்டபோது தகராறு ஏற்பட்டு அந்த பெண் விருத்தாசலம் வந்துவிட்டார்.

கடந்த 20ம் தேதி அப்பாஸ் விருத்தாசலம் சென்று அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது தர மறுத்து மகன்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பாஸ் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த பெண் குறித்து அப்பாஸ் கூறும்போது, ‘எனக்கு கணவர் கிடையாது, உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்து பணம், பொருட்களை வாங்கியுள்ளார்.

இங்கு வந்து விசாரித்தபோதுதான் அவர் இதுபோன்று ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகள் வாங்கி ஏமாற்றியுள்ளார் என தெரியவந்தது’ என்றார். இதேபோல கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது சேட்டு மகள் எனது தந்தையுடன் அந்த பெண் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்து நகை, பணமும் அபேஸ் செய்துள்ளதாகவும், பண்ருட்டியை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தன்னை திருமணம் செய்து ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பைனான்ஸ் எடுத்து கொடுத்ததாகவும்புகார் அளித்துள்ளார்.

அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற ரபீக் என்பவர் தன்னையும் திருமணம் செய்து ரூ.2 லட்சம் பைனான்ஸ் எடுத்து கொடுத்தும் வீடு வாடகைக்கு அட்வான்ஸ் ரூ.70 ஆயிரம் கொடுத்ததாகவும், விழுப்புரத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவரின் மனைவி தனது கணவருடனும் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்ததால் கணவரை விவாகரத்து செய்து வாழ்க்கை இழந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா முகமதுவும் புகார் கூறியுள்ளார். 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்ததாகவும் தற்போது விருத்தாசலத்தில் ஒரு டீ கடையில் அப்பெண் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். ஒரே பெண் 6 பேரை திருமணம் செய்து பணம், நகைகளை பறித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 6 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றிய கல்யாண ராணி appeared first on Dinakaran.

Read Entire Article