
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து வழங்கப்படும்.
பயனாளியிடம் கோழிக்கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளியாகவோ, அவர்தம் குடும்பத்தினராகவோ இருத்தல் கூடாது.
மேற்கண்ட தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம், தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.