அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் வகையறா கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நகைக்கடை, துணிக்கடை, முடி திருத்தும் கடை உள்பட 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இவர்கள் மாதந்தோறும் இந்துசமய அறநிலைத் துறைக்கு வாடகை கட்டி வந்தனர். கடந்த பல வருடங்களாக 5 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அறநிலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அறநிலைத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை அகற்றி சீல் வைக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர் பாரதிராஜா, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் உஷா, அமைந்தகரை தாசில்தார் மாரியம்மாள், அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்தனர். அப்போது கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வந்து கடைக்காரர்களை சமாதானப்படுத்தினர். ‘’நீதிமன்ற உத்தரவின்படிதான் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க வந்துள்ளார்கள். பிரச்னை செய்யக்கூடாது’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.
The post 5 கோடி ரூபாய் வாடகை பாக்கி; கோயிலுக்கு சொந்தமான 40 கடைகளுக்கு சீல் வைப்பு: அமைந்தகரையில் பரபரப்பு appeared first on Dinakaran.