
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த திங்கட்கிழமை 4வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி கிஷோர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கிஷோர் மடேகஞ்ச் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று முன் தினம் அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப் - இன்ஸ்பெக்டர் சஹினா கான் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த கிஷோர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து தற்காப்பிற்காக எஸ்.ஐ. சஹினா கான் குற்றவாளி கிஷோரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். இந்த துப்பாக்கி சூட்டில் கிஷோரின் காலில் குண்டு பாய்ந்தது. பின்னர், கிஷோர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.