ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை கைது செய்து, அவர்களது 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. தலைமன்னார் நீதிமன்றம் மார்ச் 7ம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள், அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகமும் பாதிக்கப்பட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகமே வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் 2வது நாளாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் ஒன்றிய அரசு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post 2வது நாளாக தொடரும் போராட்டம்: 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை appeared first on Dinakaran.