திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த லாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வந்தார்.
மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்த நிலையில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் ராமதாஸுக்கு கைகொடுத்தது.அதை தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதரவும் அதிகளவில் கிடைத்ததால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார். ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி இருவரையும் சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தது.
இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அக்கட்சியின் தலைவரும், தனது மகனுமான அன்புமணி மீது அடுக்கடுக்காய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது பாமகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சூழலில், நாளை (30ஆம் தேதி) முதல் அன்புமணி மூன்று நாள்கள் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 25 மாவட்ட செயலாளர்களை மாற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திண்டிவனம் அடுத்த லாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 25 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்வதற்கான பட்டியலை ராமதாஸ் தயாரித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
The post 25 பாமக மாவட்ட செயலாளர்களை மாற்ற ராமதாஸ் முடிவு?.. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை appeared first on Dinakaran.