சென்னை: 22 சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசாக ரொக்கமாக ரூ.5.5 லட்சம் மற்றும் சான்றிதழ்களை பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் வழங்கினார். இன்று 28.02.2025 சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து சரக துணைப்பதிவாளர்(பால்வளம்)-களின் பணித்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் அனைவரையும் வரவேற்று ஆய்வு கூட்டத்தில் ஆய்வு பொருளை எடுத்துரைத்து, பால்வளத்துறை அமைச்சர் அவர்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறன் அதிகமுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட வாரியாக சரக துணைப்பதிவாளர்(பால்வளம்)-களிடம் களப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்டங்களில் துணைப் பதிவாளர்கள் பொது மேலாளருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், எனவும் மாவட்ட அளவில் உள்ள குறைபாடுகளை களைய ஏதுவாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கப் பணியாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தற்போது கொள்முதல் செய்யப்படும் பாலினை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தார். புதிய சங்கங்கள் பதிவு, புதிய பால் சேகரிப்பு மையங்கள் அமைத்தல், செயலிழந்த சங்கங்களை செயல்படுத்துதல், கலைத்தல் நடவடிக்கையிலிருக்கும் சங்கங்களை மீட்சி செய்தல், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி பால் பணப்பட்டுவாடா வழங்குதல், தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.3/- ஊக்கத்தொகையினை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றடையச் செய்தல், கட்டிடம் இல்லாத பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டிட வசதி ஏற்படுத்துதல், பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டுக் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் பெறுவதை எளிமைப்படுத்துதல், பாலின் தரம் மற்றும் அளவு குறித்து நிகழிட ஒப்புகை வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
நடப்பாண்டில் 276 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், 141 செயலிழந்த சங்கங்கள் மீள செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றும் 124 சங்கங்கள் களைத்தலில் இருந்து மீள பால் கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுகள் வழங்குதல்; பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புகள் 2023 – 2024 அறிவிப்பு எண்.26-ஐ செயலாக்கம் செய்யும் வகையில் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் ( 04 நபர்கள் ), சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் (12 நபர்கள்) மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் (06 நபர்கள்) ஆகிய மூன்று வகைகளின் கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000/- பரிசுத் தொகையினை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.
The post 22 சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசாக ரொக்கமாக ரூ.5.5 லட்சம் மற்றும் சான்றிதழ்: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார் appeared first on Dinakaran.