
சென்னை,
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.
தவெக செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் என். ஆனந்த், "வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் இன்று வெளியாகும். விஜயை, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். விஜயின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விவரம்:-
* 2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய். தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.
* தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.
* ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு; செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம்.
* சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராக தலைவர் விஜயை வெற்றியடைய செய்யவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும்.
* பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது: தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும்.
கூட்டம் முடிவில், கூட்டணி மற்றும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.