2024-25ம் பருவத்தில் 5,48,422 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு தகவல்

3 weeks ago 4

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 2024-25ம் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 5,48,422 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுக்காப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், அக்டோபர் 1ம் தேதி துவங்கும் நெல் கொள்முதல் பருவத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலன் கருதி செப்டம்பர் மாதம் முதல் துவங்க கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று, செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கே.எம்.எஸ் 2023-24ம் கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதலை அதிகரிக்க ஏதுவாக, விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசால் ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 லிருந்து ரூ.107 ஆகவும், பொது ரகம் ரூ.50லிருந்து ரூ. 82ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும் நடப்பு கே.எம்.எஸ் 2024-25ம் கொள்முதல் பருவத்திற்காக ஏற்கனவே, வழங்கி வந்த ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு முறையே சன்னரகம் ரூ. 107 லிருந்து ரூ.130 ஆகவும் பொதுரகம் ரூ.82 லிருந்து ரூ.105 ஆகவும் உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒரு குவிண்டால் சன்னரகம் நெல் ரூ.2,450க்கும் பொதுரகம் நெல் ரூ.2405க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த கே.எம்.எஸ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய பருவங்களில் சுமார் 40 லட்சம் மெ.டன்னிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நடப்பு கே.எம்.எஸ் 2024-25ம் பருவத்தில் கடந்த செப்.1ம் தேதி முதல் ஜன.9ம் தேதிவரை 75,936 விவசாயிகளிடமிருந்து 5,48,422 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதலுக்கான விலையாக ரூ.1,313.96 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சம்பா, தாளடி நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், நாளது தேதியில் 1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பு கொள்முதல் பருவத்திற்காக 8281 பருவகால பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 3448 எண்ணிக்கையிலான தூற்றும் இயந்திரங்கள், 3980 எண்ணிக்கையிலான ஈரப்பத சோதனை மானிகள், தேவையான அளவு காலி சாக்குகள் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பது மற்றும் புகார்கள் தொடர்பாக தலைமை அலுவலக உழவர் உதவி மையம் சேவை 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான கூடுதல் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து எவ்வித புகாருக்கும் இடமின்றி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post 2024-25ம் பருவத்தில் 5,48,422 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article