2020க்கு பிறகும் பி.எஸ்.4 வாகனங்கள் பதிவு தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

1 week ago 4

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.4 வாகனங்கள், 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ்.4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் பி.எஸ்.4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகளுக்கு பங்கு உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஜூன் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post 2020க்கு பிறகும் பி.எஸ்.4 வாகனங்கள் பதிவு தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article